ஒரே நாளில் பல இடங்களில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கயஸ் வான்!

ஒரே நாளில் பல இடங்களில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கயஸ் வான்!
accident in vavuniya

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று(17) மாலை வவுனியாவில்  இடம்பெற்றுள்ளது.

யாழ் வீதி ஊடாக ஏ9 வீதியில் வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்களை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றதுடன், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக நகரில் இருந்து யாழ் வீதி நோக்கிச் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளையும் மோதித்தள்ளியது.

தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்ற குறித்த ஹயஸ் ரக வாகனம் இலுப்பையடிப் பகுதியில் மேலும் ஒரு முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியதுடன், அங்கிருந்தும் ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்று வான் ஒன்றையும் மோதித் தள்ளியதுடன் குறித்த ஹயஸ் வாகனம் தொடர்ந்தும் தப்பிச் சென்றுள்ளது.

குறித்த வானின் சாரதி மது போதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருட்கள் எதனையும் கடத்திச் சென்றாரா என்ற கோணத்தில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.